நோய்க்குச் சிகிச்சை
நுரையீரலுக்கு அருகில் இருந்த
ரணத்தினால் ஏற்பட்ட என் நோய், குணமாகாமல் இருந்துவந்தது,கொஞ்சம்
கவலையை அளித்தது. ஆனால், உள்ளுக்கு மருந்து சாப்பிடுவதனால் இது
குணமாவதில்லை என்பதையும் உணவில் செய்து கொள்ளும் மாறுதல்களினாலும்
வெளி பரிகாரங்களினாலும் குணமாகும் என்பதையும் அறிவேன். டாக்டர்
அல்லின்ஸன் பிரபலமான சைவ உணவுவாதி. அவரை அழைத்து வரச் செய்தேன்.
அவர் உணவு மாறுதல்களின் மூலமே பல நோய்களுக்குச் சிகிச்சை செய்துவந்தார்.
1890-ஆம்ஆண்டிலும் அவரைச் சந்தித்திருக்கிறேன். அவர் என்னை முற்றும்
பரிசோதனை செய்து பார்த்தார். பால் சாப்பிடுவதே இல்லை என்று நான்
விரதம் எடுத்துக் கொண்டிருப்பதுபற்றியும் அவரிடம் சொன்னேன்.
அவர் என்னை உற்சாகப்படுத்திவிட்டுச் சொன்னதாவது: நீங்கள் பால்
சாப்பிடவேண்டியதே இல்லை. உண்மையில், சில நாட்களுக்கு நீங்கள்
கொழுப்புச் சத்து எதையுமே சாப்பிடக் கூடாது என்றே நான் விரும்புகிறேன்.
சாதாரணப் பழுப்புரொட்டி, பீட்ரூட், முள்ளங்கி, வெங்காயம், மற்றும்
கிழங்குகள் போன்றவற்றைப் பச்சையாகவும், கீரைகளையும், பழங்களையும்
முக்கியமாக ஆரஞ்சுப் பழங்களையும் சாப்பிட்டு வருமாறு அவர் எனக்கு
யோசனை கூறினார். கறிகாய்களைச் சமைக்கக் கூடாது; அப்படியே பச்சையாக
மென்று தின்ன என்னால் முடியாவிட்டால் நுட்பமாகத் திருகி வைத்துக்கொண்டு
சாப்பிடச் சொன்னார்.
இதன்படி மூன்று நாட்கள் சாப்பிட்டேன். ஆனால்,
பச்சைக் காய்கறிகள் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. இந்தப் பரீட்சையை
முற்றும் அனுசரித்துப் பார்க்கும் வகையில் என் உடல்நிலை இல்லை.
பச்சைக் கறிகாய்களைச் சாப்பிடுவதற்கு எனக்குப் பயமாகவே இருந்தது.
அதோடு, என் அறையின் சன்னல்களையெல்லாம் எப்பொழுதும் திறந்தே வைத்திருக்கும்படியும்,வெதுவெதுப்பான
நீரில் குளிக்குமாறும், நோயுள்ள பகுதிகளில் எண்ணெய் தடவித்தேய்க்கும்
படியும், பதினைந்து நிமிடங்களிலிருந்து முப்பது நிமிட நேரம்
வரை திறந்த வெளியில் நடக்கு மாறும் டாக்டர் அல்லின்ஸன் எனக்குக்
கூறினார். என் அறையின் சன்னல்கள், பிரெஞ்சு முறையிலானவை. ஆகவே,
முழுவதும் திறந்து வைத்துவிட்டால்மழை நீரெல்லாம் உள்ளே வந்துவிடும்.
விசிறி போன்றிருந்த சன்னல் கதவைத் திறக்கவே முடியவில்லை. ஆகவே,
நல்ல காற்று உள்ளே வரட்டும் என்பதற்காக அதன் கண்ணாடிகளை உடைத்துவிட்டேன்.
மழை நீர் உள்ளேவராத வகையில் ஒருவாறு சன்னலையும் திறந்து வைத்தேன்.
இந்த முறைகள் எல்லாம் ஓரளவுக்குஎன் தேக நிலையில் அபிவிருத்தியை
அளித்தன. என்றாலும், பூரணமாகக் குணமாகிவிடவில்லை. அச்சமயம் லேடி
செஸிலியா எப்பொழுதாவது என்னைப் பார்க்க வருவதுண்டு.
நாங்கள் நண்பர்களானோம். நான் பால் சாப்பிடும்படி
செய்துவிட வேண்டும் என்று அவர் மிகவும் முயன்றார். ஆனால், நான்
பிடிவாதமாக மறுத்து விடவே பாலுக்குப் பதிலாகச் சாப்பிடக்கூடிய
ஒன்றைத் தேடிப் பிடிப்பதற்காக அலைந்தார். பாலும் தானியச் சத்தும்
கலந்ததான மால்ட்டட் மில்க் சாப்பிடலாம் என்று யாரோ ஒரு நண்பர்
அவருக்குக் கூறினார். அதில்பால் கலப்பே கிடையாது என்றும், பால்
சத்து இருக்கும் வகையில் ரசாயன முறையில் அது தயாரிக்கப் பட்டது
என்றும், உண்மையை அறியாமலேயே அந்த நண்பர் அவருக்கு உறுதி கூறிவிட்டார்.
லேடி செஸிலியா, என்னுடைய சமயக் கொள்கை சம்பந்தமான நம்பிக்கைகளை
மதித்து நடப்பவர் என்பதை அறிவேன். ஆகவே, அவர் சொன்னதை அப்படியே
நம்பிவிட்டேன். அந்தப் பொடியை நீரில் கலந்து சாப்பிட்டேன். அதன்
சுவை பாலின் சுவை போன்றே இருக்கக் கண்டேன். பிறகு புட்டியின்
மீது ஒட்டியிருந்த சீட்டில் எழுதியிருந்ததைப் படித்துப் பார்த்தேன்.
பாலிலிருந்து தயாரிக்கப் படுவதே அது என்பதை அறிந்தேன். சாப்பிட்ட
பிறகுதான் இதெல்லாம் தெரிந்தது. ஆகவே, அதைச் சாப்பிடுவதை விட்டு
விட்டேன்.
நான் கண்டுபிடித்துவிட்டதைக் குறித்து லேடி
செஸிலியாவுக்கு அறிவித்து அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றும்
கேட்டுக் கொண்டேன். அவரோ, தமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்ள
விரைந்தோடி வந்தார். அவருக்குச் சொன்ன நண்பர், புட்டிமீது ஒட்டியிருந்த
சீட்டைப் படித்துப் பார்க்கவே இல்லை. இதைக் குறித்து கவலைப்படவே
வேண்டாம் என்று அவரை மிகவும் வேண்டிக் கொண்டேன். எவ்வளவோ சிரமப்
பட்டுத் தேடிக்கொண்டு வந்தவைகளை நான் பயன்படுத்திக் கொள்ள முடியாமைக்கு
என் வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டேன். தெரியாததனால் தவறாகப்
பால் சாப்பிட்டு விட்டதற்காக, குற்றம்செய்து விட்டதாக எண்ணி
நான் வருத்தப் படவில்லை என்றும் அவருக்கு உறுதி கூறினேன். லேடி
செஸிலியாவுடன் ஏற்பட்ட தொடர்பைப் பற்றிய மற்றும் பல இனிய ஞாபகங்களெல்லாம்
உண்டு. அவற்றையெல்லாம் கூறாமல் மேலே செல்ல வேண்டியவன் ஆகிறேன்.
எத்தனையோ சோதனைகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் இடையே எனக்குப் பெரும்
ஆறுதல் அளிப்பவர்கள் ஆக இருந்து வந்த அநேக நண்பர்களைப் பற்றி
நான்எண்ணிப் பார்க்க முடியும். இவ்விதம் கடவுள், துயரங்களையும்இன்பமானவைகளாக்கி
விடுகிறார். இதில் நம்பிக்கையுள்ளவர்கள், கருணைக் கடலான கடவுளின்
அந்த அருளையே அந்நண்பர்களிடமும் காண்பார்கள்.
டாக்டர் அல்லின்ஸன் அடுத்த முறை என்னைப் பார்க்க
வந்த போது, ஆகாரத்தில்எனக்கு விதித்திருந்தகட்டுத் திட்டங்களைத்
தளர்த்தி விட்டார். கொழுப்புச்சத்துக்காக நிலக்கடலை, வெண்ணெய்
அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொள்ளும் படியும், கறிகாய்களைச்
சமைத்து, நான் விரும்பினால் அரிசிச் சாதத்துடன் சாப்பிடுமாறும்
கூறினார். இந்த மாறுதல்கள் எனக்குப் பிடித்தன. ஆனால், இவைகளினாலும்
பூரண குணம் ஏற்படவில்லை. அதிக ஜாக்கிரதையான பணிவிடை அவசியமாகவே
இருந்தது. பெரும்பாலும் நான் படுக்கையிலேயே இருக்க வேண்டியிருந்தது.
என்னைப் பரிசோதித்துப் பார்ப்பதற்காக டாக்டர் மேத்தா அவ்வப்போது
வருவதுண்டு. தாம் சொல்லுகிறபடி கேட்பதாய் இருந்தால், என் நோயைக்
குணப்படுத்திவிடுவதாக அவர் எப்பொழுதும் சொல்லி வந்தார். நிலைமை
இவ்வாறு இருந்து வரும்போது ஒருநாள், ஸ்ரீராபர்ட்ஸ் என்னைப் பார்க்க
வந்தார். தாய் நாட்டுக்குத் திரும்பி விடுமாறு அவர் வற்புறுத்திச்
சொன்னார். இந்த நிலைமையில் நீங்கள் நெட்லிக்குப் போவதுசாத்தியமே
இல்லை. இனி வரப்போவது கடுமையான குளிர்காலம். இந்தியாவில் தான்
நீங்கள் பூரணமாகக் குணமடைய முடியுமாகையால் அங்கே நீங்கள் போய்விட
வேண்டும் என்று உங்களுக்குக் கண்டிப்பாகக் கூறுகிறேன்.அங்கே
நீங்கள் குணமடைந்த பிறகு அப்பொழுதும் யுத்தம் தொடர்ந்து நடந்து
கொண்டு இருந்தால், நீங்கள் உதவி செய்ய அங்கே அநேக வாய்ப்புகள்
இருக்கின்றன. இப்பொழுதுகூட, நீங்கள் இது வரை செய்து இருப்பது
எந்த விதத்திலும் அற்பமானது என்று நான் கருத வில்லை. அவருடைய
யோசனையை ஏற்றுக்கொண்டேன். இந்தியாவுக்குத் திரும்புவதற்கு வேண்டிய
ஏற்பாடுகளைச் செய்யலானேன்.