ஒரு ஹிமாலயத் தவறு
அகமதாபாத் கூட்டம் முடிந்தவுடனே
நதியாத்திற்குச் சென்றேன். ஹிமாலயத் தவறு என்ற சொல்லை நான் முதன்
முதலில் அங்கேதான் உபயோகித்தேன். அச்சொல் பின்னால் அதிகப் பிரபலமாயிற்று.
அகமதாபாத்தில்கூட, நான் செய்துவிட்ட தவறை லேசாக உணர ஆரம்பித்துவிட்டேன்.
ஆனால், நதியாத்திற்குச் சென்று அங்கே இருந்த உண்மையான நிலைமையைப்
பார்த்து, கேடா ஜில்லாவைச் சேர்ந்தவர்கள் ஏராளமாகக் கைது செய்யப்பட்டுவிட்டனர்
என்பதைக் கேள்விப்பட்ட பிறகே, நான் பெருந்தவறைச் செய்துவிட்டேன்
என்பது திடீரென்று எனக்குப் பட்டது. கேடா ஜில்லாவின் மக்களையும்
மற்ற இடங்களில் இருந்தவர்களையும், அதற்கு வேண்டிய பக்குவத்தை
அவர்கள் அடைவதற்கு முன்னாலேயே சாத்விகச் சட்டமறுப்பை ஆரம்பிக்கும்படி
சொல்லிவிட்டது பெருந்தவறு என்று இப்பொழுது எனக்குத் தோன்றியது.
நான் ஒரு பொதுக் கூட்டத்தில் இவ்விதம் கூறினேன். இவ்விதம் தவறை
நான் ஒப்புக்கொண்டதைக் குறித்து நான் பரிகசிக்கப்பட்டது கொஞ்சமல்ல.
ஆனால், அவ்வாறு தவறை ஒப்புக்கொண்டதைக் குறித்து நான் வருத்தப்பட்டதே
இல்லை. ஏனெனில், ஒருவர் தாம் செய்யும் தவறுகளைப் பூதக் கண்ணாடி
கொண்டு பார்த்து, பிறர் தவறுகள் விஷயத்தில் அவ்விதம் பார்க்காமல்
இருந்தால் தான், இரண்டையும் நியாயமாக அவர் மதிப்பிட முடியும்
என்று நான் எப்பொழுதும் கருதி வந்திருக்கிறேன்.
அதோடு சத்தியாக்கிரகியாக இருக்க விரும்புகிறவர்,
இந்த விதியை மனப்பூர்வமாகவும் தவறாமலும் அனுசரித்து வரவேண்டும்
என்றும் நான் நம்புகிறேன். நான் செய்துவிட்ட ஹிமாலயத் தவறு என்ன
என்பதை இனிக்கவனிப்போம். சாத்விகச் சட்ட மறுப்பைச் செய்வதற்கு
ஒருவர் தகுதியை அடைவதற்கு முன்னால், அவர் அரசாங்கச் சட்டங்களுக்கு
விரும்பி மரியாதையுடன் பணிந்து நடந்தவராக இருக்கவேண்டும். ஏனெனில்,
சட்டத்தை மீறி நடந்து விட்டால் அதற்குரிய தண்டனையை அடைய நேருமே
என்ற பயத்தினாலேயே பெரும்பாலும் அத்தகைய சட்டங்களுக்குப் பணிந்து
நடக்கிறோம். அதிலும் ஒழுக்க நெறி சம்பந்தப்படாத சட்டங்கள் விஷயத்தில்
இது பெரிதும் உண்மையே ஆகும். உதாரணமாக, திருடுவதற்கு எதிரான
சட்டம் இருந்தாலும், இல்லாது போனாலும், யோக்கியமும் கௌரவமும்
உள்ள ஒருவர், திடீரென்று திருட முற்பட்டுவிட மாட்டார். ஆனால்,
இவரே, இருட்டிய பிறகு சைக்கிளில் விளக்கு வைத்துக்கொண்டே வெளியில்
போக வேண்டும் என்ற விதியை மீறி நடந்து விடுவதைக் குறித்துக்
கவலைப்படுவதில்லை. இது சம்பந்தமாக அதிக ஜாக்கிரதையாக இருக்கும்படி
புத்திமதி கூறினால், அதையாவது அன்போடு ஏற்றுக்கொள்ளுவாரா என்பதும்
சந்தேகம்.
ஆனால், இந்த விதியை மீறினால் குற்றஞ்சாட்டி
வழக்குத் தொடரப்படும் அசௌகரியத்திலிருந்து தப்புவதற்கு மாத்திரம்,
கட்டாயமான இது போன்ற விதியை அவர் அனுசரித்து நடப்பார். அவ்விதம்
சட்டத்திற்கு உடன்படுவது, ஒரு சத்தியாக்கிரகி விருப்பத்துடன்
தானே உடன்பட வேண்டியதைப் போன்றது ஆகாது. ஒரு சத்தியாக்கிரகி,
சமூகத்தின் சட்டங்களுக்குப் புத்திசாலித்தனமாகவும், தமது சுயேச்சையான
விருப்பத்தின் பேரிலும் உடன்பட்டு நடக்கிறார். ஏனெனில், அவ்விதம்
செய்வது தமது புனிதமான கடமை என்று அவர் கருதுகிறார். இவ்விதம்
சமூகத்தின் சட்டங்களுக்கு ஒருவர் தவறாமல் பணிந்து நடந்தால்தான்,
எந்தக் குறிப்பிட்ட விதிகள் நல்லவை, நியாயமானவை, எவை அநியாயமானவை,
பாவமானவை என்பதைச் சீர்தூக்கிப் பார்க்கக் கூடிய தகுதி அவருக்கு
ஏற்படும். அப்பொழுதுதான் தெளிவான சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில்
சில சட்டங்களைச் சாத்வீக முறையில் மீறுவதற்கான உரிமை அவருக்கு
ஏற்படும்.
அவசியமான இந்த எல்லையைக் கவனிக்காமல் போனது
தான் நான் செய்த தவறு. இவ்வாறு மக்கள் தங்களைத் தகுதியாக்கிக்
கொள்ளுவதற்கு முன்னால் சாத்வீகச் சட்ட மறுப்பை ஆரம்பிக்குமாறு
அவர்களைக் கேட்டுக்கொண்டு விட்டேன். இத்தவறு, ஹிமாலயத்தைப் போன்று
பெரியது என்று எனக்குத் தோன்றுகிறது. கேடா ஜில்லாவில் பிரவேசித்ததுமே
கேடா சத்தியாக்கிரகத்தைப் பற்றிய பழைய நினைவுகளெல்லாம் எனக்குத்
திரும்ப வந்தன. எனவே, அவ்வளவு தெளிவான விஷயத்தை நான் எப்படிப்
புரிந்து கொள்ளாது போனேன் என்று ஆச்சரியப்பட்டேன். சாத்விகச்
சட்ட மறுப்பு செய்வதற்கு வேண்டிய தகுதியை மக்கள் பெறுவதற்கு
முன்னால், அதன் ஆழ்ந்த உட் பொருள்களை அவர்கள் முற்றும் அறிந்து
கொண்டிருக்க வேண்டியது அவசியம் என்பதை நான் தெரிந்துகொண்டேன்.
எனவே, பொதுஜன அளவில் சாத்விகச் சட்ட மறுப்பைத் திரும்பவும் ஆரம்பிப்பதற்கு
முன்னால் நன்றாகப் பண்பட்ட, சத்தியாக்கிரகத்தின் கண்டிப்பான
நிபந்தனைகளை நன்றாகப் புரிந்துகொண்டிருக்கும், புனித உள்ளம்
படைத்த தொண்டர்கள் படை இருக்கும்படி செய்யவேண்டியது அவசியம்.
அவைகளை அவர்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்லவும், தூக்கமின்றி
உஷாராக இருப்பதன் மூலம் மக்களைச் சரியான வழியில் நடக்கும்படி
செய்யவும் அவர்களால் முடியும்.
என் மனத்தில் இவ்விதமான எண்ணங்களுடன் நான் பம்பாய்
போய்ச் சேர்ந்தேன். அங்கிருந்த சத்தியாக்கிரக சபையின் மூலம்
சத்தியாக்கிரகப் படையைத் திரட்டினேன். சத்தியாக்கிரகத்தின் பொருள்
சம்பந்தமாகவும், அதன் உள்ளிருக்கும் முக்கியத்துவத்தையும் பொதுமக்கள்
அறியும்படி செய்யும் வேலையை அத்தொண்டர்களின் உதவியைக் கொண்டு
ஆரம்பித்தேன். இவ்விஷயத்தைப் போதிக்கும் துண்டுப் பிரசுரங்களை
வெளியிட்டு முக்கியமாக இந்த வேலை நடந்தது. இந்த வேலை நடந்துகொண்டிருந்தபோது
ஒரு விஷயத்தை நான் காண முடிந்தது. சத்தியாக்கிரகம் சம்பந்தமான
சமாதான வேலையில் மக்கள் சிரத்தை கொள்ளும்படி செய்வது மிகவும்
கஷ்டமான காரியம் என்பதைக்கண்டேன். தொண்டர்களும் பெருந்தொகையில்
வந்து சேரவில்லை. சேர்ந்த தொண்டர்களோ, ஒழுங்காக முறைப்படி பயிற்சியைப்
பெறவுமில்லை. நாளாக ஆகப்புதிதாக வந்து சேருகிறவர்களின் தொகை
அதிகமாவதற்குப் பதிலாகக் குறைந்து கொண்டே போயிற்று. சாத்விகச்
சட்ட மறுப்புப் பயிற்சியின் அபிவிருத்தி, நான் ஆரம்பத்தில் எதிர்பார்த்ததைப்
போலத் துரிதமானதாக இருக்கப்போவதில்லை என்பதையும் தெரிந்து கொண்டேன்.