விரும்பி மேற்கொண்ட விரதம்
விக்டோரியா ஹோட்டலில் என்னைப்
பார்க்கலாம் என்று எதிர்பார்த்துத் திங்கட்கிழமையன்று டாக்டர்
மேத்தா அங்கே சென்றார். அங்கிருந்து நாங்கள் போய்விட்டோம் என்பதை
அறிந்தார். எங்கள் புதுவிலாசத்தைத் தெரிந்துகொண்டு, எங்கள் அறைகளுக்கு
வந்து என்னைப் பார்த்தார். கப்பலில் நான் செய்துவிட்ட தவறினால்
என் உடம்பில் படை வந்துவிட்டது. அலம்புவதற்கும் குளிப்பதற்கும்
கப்பலில் கடல் நீரையே உபயோகிப்பது நாகரிகத்திற்கு அழகு என்று
கருதி நான் சோப்பு உபயோகிப்பது நாகரிகத்திற்கு அழகு என்று கருதி
நான் சோப்புத தேய்த்துக் கடல் நீரில் குளித்தேன்.
அதன் பலனாக உடம்பு சுத்தமாவதற்குப்
பதிலாகப் பிசு பிசுப்பாயிற்று. இதனால் உடம்பில் படை வந்துவிட்டது.
அதை டாக்டர் மேத்தாவுக்குக் காட்டினேன். அவர் காடித் திராவகத்தை
போடச் சொன்னார். அதைப் போட்டதும் ஒரே எரிச்சலெடுத்து, நான் கதறி
அழுதது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. டாக்டர் மேத்தா, என்
அறையையும் அதில் நான் சாமான்கள் வைத்திருந்ததையும் பார்த்தார்.
அதில் தமக்குக் கொஞ்சமும் திருப்தியில்லை என்பதற்கு அறிகுறியாகத்
தலையை அசைத்தார். இந்த இடம் உதவாது என்றார். நாம் இங்கிலாந்துக்கு
வருவது படிப்பிற்கு மாத்திரம் அல்ல. முக்கியமாக ஆங்கிலேயரின்
வாழ்க்கையிம், பழக்க வழக்கங்களிலும் அனுபவம் பெறுவதற்காகவும்
வருகிறோம். இதற்கு நீர் ஓர் ஆங்கிலக் குடும்பத்துடன் வசிப்பது
நல்லது. ஆனால் நீர் அப்படி வசிப்பதற்கு முன்னால் .. . என்பவருடன்
சிறிது காலம் இருந்து பயிற்சி பெற வேண்டும் என்று நினைக்கிறேன்.
அவரிடம் உம்மை அழைத்துப் போகிறேன் என்றும் கூறினார்.
அவருடைய யோசனையை நன்றியறிதலுடன்
ஏற்றுக் கொண்டு, அந்த நண்பரின் அறைகளுக்கே குடிபோனேன். அவர்
முழு அன்புடன் என்னைக் கவனித்துக் கொண்டார். தமது சொந்த சகோதரனைப்போலவே
பாவித்து என்னை நடத்தினார். ஆங்கிலேயரின் நடை உடை பாவனைகளையெல்லாம்
எனக்கு கற்றுக் கொடுத்தார். ஆங்கில மொழியில் பேசவும் கற்றுக்
கொடுத்தார். என்றாலும், என் சாப்பாட்டு விஷயம்தான் சங்கடமான
பிரச்சனையாயிற்று. உப்போ, மசாலையோ இல்லாமல் வேகவைத்த காய்கறிகள்
எனக்கு பிடிக்கவே இல்லை. எனக்காக என்ன சமைப்பதென்று புரியாமல்
எங்களுக்கு உணவளித்த வீட்டு அம்மாள் திகைத்தார். காலை ஆகாரத்திற்கு
ஓட்ஸ் தானியக் கஞ்சி இருக்கும். அது கூடியவரை வயிற்றை நிரப்பும்.
ஆனால், மத்தியானச் சாப்பாட்டிலும் இரவுச் சாப்பாட்டிலும் எப்பொழுதும்
எனக்குப் பட்டினிதான். அந்த நண்பர் மாமிசம் சாப்பிடும்படி ஓயாமல்
எனக்கு எடுத்துக் கூறிக் கொண்டே இருந்தார்.
நானும் என் விரதத்தை அதற்குச்
சமாதானமாகக் கூறிவிட்டுப் பேசாமல் இருந்துவிடுவேன். மத்தியானச்
சாப்பாட்டிற்கும் இரவு உணவுக்கும் எங்களுக்குப் பசலைக் கீரையும்
ரொட்டியும் ஜாமும் இருக்கும். நானோ நன்றாகச் சாப்பிடுகிறவன்.
பெருவயிறு படைத்தவன். ஆனால் இரண்டு மூன்று ரொட்டித் துண்டுகளுக்கு
அதிகமாகக் கேட்பது சரியல்லவென்று தோன்றிதால் அதிகமாகக் கேட்கவும்
எனக்கு வெட்கம். போதாதற்கு மத்தியானத்திலும், இரவிலும் சாப்பாட்டில்
பாலும் கிடையாது. இந்த நிலையைக் கண்டு அந்த நண்பருக்கு வெறுத்துப்
போய் விட்டது.
அவர் பின்வருமாறு சொன்னார். நீர்
என் சொந்தச் சகோதரனாக இருந்தால் மூட்டை கட்டி ஊருக்கு அனுப்பியிருப்பேன்.
இங்குள்ள நிலையை அறியாமல், எழுத்து வாசனையே இல்லாத ஒரு தாயாரிடம்
செய்து கொடுத்த சத்தியத்திற்கு என்ன மதிப்பு உண்டு ? அது ஒரு
விரதமே அல்ல. சட்டப்படி அதை ஒரு விரதமாகவும் கருதுவதற்கில்லை.
அத்தகைய ஒரு சத்தியத்தில் விடாப்பிடியாக இருப்பது மூடநம்பிக்கையைத்
தவிர வேறொன்றுமில்லை. மேலும், இந்தப் பிடிவாதத்தினால் இங்கே
உமக்கு எந்தவிதப் பயனும் உண்டாகாது என்பதையும் கூறுகிறேன். மாமிசத்தை
முன்பு சாப்பிட்டதாகவும், அது உமக்குச் சுவையாக இருந்தது என்றும்
ஒப்புக் கொள்ளுகிறீர், எங்கே முற்றும் அவசியமில்லையோ அங்கே நீர்
அதைச் சாப்பிட்டிருக்கிறீர். அவசியமான இடத்தில் உண்ணமாட்டேன்
என்கிறீர், இது என்ன பரிதாபம். *
ஆனால் நான் பிடிவாதமாக இருந்தேன்.
நாள் தவறாமல் அவர் இதைக் குறித்து என்னிடம் தர்க்கம் செய்துகொண்டே
இருப்பார். முடியாது என்று எப்பொழுதும் அவருக்குப் பதில் சொல்லி
விடுவேன். அவர் தர்க்கம் செய்யச் செய்ய நானும் அதிகப் பிடிவாதக்காரனாவேன்.
கடவுளின் பாதுகாப்பைக் கோரித் தினமும் பிரார்த்திப்பேன். அதை
அடையவும் அடைவேன். கடவுளைப் பற்றிய ஞானம் அப்பொழுதே எனக்கு இருந்தது
என்பதல்ல, நம்பிக்கை தான் அது. எனக்குச் செவிலித் தாயாக இருந்த
அந்த நல்ல ரம்பா விதைத்த நம்பிக்கையின் விதையே வேலை செய்து வந்தது.
ஒரு நாள் அந்த நண்பர், பெந்தாம்
எழுதிய பயன்படுவதன் தத்தவம் (Theory of Utility) என்ற நூலை எனக்குப்
படித்துக் காட்டினார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அதன் நடை
நான் புரிந்துகொள்ள முடியாத அளவுக்குக் கடினமாக இருந்தது. அதன்
பொருளை விளக்கவும் ஆரம்பித்தார். அப்பொழுது நான் சொன்னேன். தயவு
செய்து என்னை மன்னித்துவிடுங்கள், இந்த நுட்பமான விஷயங்களெல்லாம்
எனக்கு விளங்கமாட்டா. மாமிசம் சாப்பிடுவது அவசியம் என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன்.
ஆனால் நான் கொண்ட விரதத்திற்குப் பங்கம் செய்ய முடியாது. இதைப்
பற்றி என்னால் விவாதிக்கவும் முடியாது. அப்படியே உங்களோடு விவாதித்தாலும்
வெற்றி பெற முடியாதென்பதும் நிச்சயம். நான் முட்டாள் பிடிவாதக்காரன்
என்று என்னை விட்டு விடுங்கள். என் மீது நீங்கள் கொண்டிருக்கும்
அன்பை உணருகிறேன். என் நலத்தில் நீங்கள் அக்கறை கொண்டிருக்கிறீர்கள்
என்பதையும் அறிகிறேன். எனக்காக நீங்கள் கவலைப்படுவதனாலேயே இதைப்
பற்றி அடிக்கடி எனக்கு கூறி வருகிறீர்கள் என்பதையும் அறிவேன்.
ஆனால், நான் உங்கள் புத்திமதிப்படி நடக்க முடியாது. விரதம் விரதமே.
அதற்குப் பங்கம் செய்ய என்னால் ஆகாது.
அந்த நண்பர் ஆச்சரியத்தோடு என்னை
உற்றுப் பார்த்தார். புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, நல்லது.
இனிமேல் உம்மிடம் வாதம் செய்யமாட்டேன் என்றார். நான் மகிழ்ச்சியடைந்தேன்.
பிறகு இது விஷயமாக என்னிடம் அவர் விவாதிக்கவே இல்லை. ஆனால்,
என் விஷயத்தில் கவலைப்படுவதை மாத்திரம் அவர் விட்டுவிட வில்லை..
அவர் புகை பிடிப்பார், குடிப்பார். ஆனால் அப்படி செய்யுமாறு
என்னை அவர் கேட்டதே இல்லை. உண்மையில் இந்த இரண்டு பழக்கங்களும்
எனக்குக் கூடாது என்றே சொல்லி வந்தார். மாமிசம் சாப்பிடாவிடில்
நான் பலவீனமாகிவிடுவேன், அதனால், இங்கிலாந்தில் நான் சுகமாக
வசிக்க முடியாது போகும் என்பது ஒன்றே அவருடைய கவலையெல்லாம்.
இப்படி ஒரு மாதம் நான் பயிற்சி
பெற்றேன். நண்பரின் வீடு ரிச்மாண்டில் இருந்தது. வாரத்தில் இரண்டொரு
முறைகளுக்கு மேல் லண்டனுக்குப் போவது சாத்தியமில்லை. ஆகவே, லண்டனுக்கு
அருகில் உள்ள ஏதாவது ஒரு குடும்பத்தோடு என்னைத் தங்க வைக்க வேண்டும்
என்று டாக்டர் மேத்தாவும் ஸ்ரீ தளபத் ராம் சுக்லாவும் முடிவு
செய்தனர். மேற்குக் கென்சிங்கனில் ஓர் ஆங்கிலோ இந்தியரின் வீட்டைக்
கண்டுபிடித்து, ஸ்ரீ சுக்லா என்னை அங்கே கொண்டு போய் விட்டார்.
அந்த வீட்டுக்கார அம்மாள் விதவை. என்னுடைய விரத்தைக் குறித்து
அவரிடம் கூறினேன். என்னைச் சரியாகக் கவனித்துக் கொள்ளுவதாக அம்மூதாட்டி
வாக்களித்தார். அவர் வீட்டில் வசிக்கலானேன். அங்கும் கூட அநேகமாக
நான் பட்டினி கிடக்கவே நேர்ந்தது.
மிட்டாயும் பலகாரங்களும் அனுப்புமாறு
வீட்டுக்கு எழுதியிருந்தேன். ஆனால், எதுவும் இன்னும் வந்து சேரவில்லை.
அங்கே கொடுத்த சாப்பாடெல்லாம் எனக்குச் சப்பென்று இருந்தது.
சாப்பாடு பிடித்திருக்கிறதா என்று அம்மூதாட்டி தினமும் என்னைத்
கேட்டார். ஆனால், அவர்தான் என்ன செய்வார் ? முன்பு இருந்தது
போலவே இன்னும் எனக்கும் கூச்சம் இருந்தது. முதலில் பரிமாறியதை
விட அதிகமாக எதையும் கேட்கும் துணிவு எனக்கு இல்லை. அந்த அம்மாளுக்கு
இரு பெண்கள். அதிகப்படியாக இரண்டொரு ரொட்டித் துண்டுகளை அப்பெண்கள்
வற்புறுத்தி எனக்கு வைப்பார்கள். ஆனால், ஒரு முழு ரொட்டிக்குக்
குறைந்த எதனாலும் என் வயிறு நிரம்பாது என்பது அவர்களுக்குத்
தெரியவே இல்லை *
ஆனால், இதற்குள் எனக்குக் கால்
முளைத்துவிட்டது. இன்னும் என் பாடங்களை நான் படிக்க ஆரம்பிக்கவில்லை.
ஸ்ரீ சுக்லா தூண்டியதன் பேரில் அப்பொழுதுதான் பத்திரிகைகளைப்
படிக்க ஆரம்பித்தேன். இந்தியாவில் நான் செய்திப் பத்திரிகைகளைப்
படித்ததே இல்லை. இங்கே தொடர்ந்து படித்து வந்தால் பத்திரிகைகளை,
படிப்பதில் எனக்குச் சுவை ஏற்பட்டது. டெய்லி நியூஸ், டெய்லி
டெலிகிராப் பால்மால் கெஜட் ஆகிய பத்திரிகைகளைப் எப்பொழுதும்
மேலெழுத்வாரியாகப் படிப்பேன். இதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேல்
ஆகாது. ஆகவே, அங்கும் இங்கும் சுற்ற ஆரம்பித்தேன். சைவச் சாப்பாடு
விடுதி எங்காவது இருக்கிறதா என்று தேட முற்பட்டேன். அத்தகைய
சாப்பாட்டு விடுதிகள் நகரில் இருக்கின்றன என்று நான் தங்கியிருந்த
வீட்டுக்கார அம்மாள் கூறியிருந்தார். தினம் பத்துப் பன்னிரண்டு
மைல் தூரம் சுற்றுவேன். முலிவான சாப்பாட்டு விடுதிக்குப் போய்
அங்கே வயிறு நிறைய ரொட்டியைத் தின்பேன். என்றாலும், எனக்கு திருப்தி
ஏற்படாது. இவ்வாறு சுற்றி அலைந்து வரும் போது ஒரு நாள் பாரிங்டன்
தெருவில் ஒரு சைவச் சிற்றுண்டிச் சாலையைக் கண்டுபிடித்தேன்.
அதைக் கண்டதும், தன் மனத்துக்கு இனியதைக் கண்டதும் ஒரு குழந்தை
என்ன குதூசலம் ஏற்படுமோ அவ்வளவு ஆனந்தம் எனக்கு உண்டாயிற்று.
அதற்குள் போகும் முன்பு, கதவுக்கு அருகில் கண்ணாடி ஜன்னலில்
விற்பனைக்காகப் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன்.
அவற்றில் சால்ட் எழுதிய சைவ உணவின் முக்கியத்துவம் என்ற புத்தகமும்
இருந்தது. ஒரு ஷில்லிங் கொடுத்து அதை வாங்கிக் கொண்டு நேரே சாப்பாட்டு
அறைக்குச் சென்றேன். இங்கிலாந்துக்கு வந்த பிறகு நான் வயிறார
உண்ட முதல் சாப்பாடு இதுதான். கடவுள் எனக்குத் துணை செய்துவிட்டார்.
சால்ட் எழுதிய அந்த நூலை ஒரு வரிவிடாமல்
படித்து முடித்தேன். அது என் மனதைப் பெரிதும் கவர்ந்தது. அந்த
புத்தகத்தைப் படித்த நாள் முதற்கொண்டே, என் இஷடத்தின் பேரில்
நான் சைவ உணவு விரதம் பூண்டவனானேன் என்று நான் சொல்லிக் கொள்ள
முடியும். என் தாயாரின் முன்பு நான் விரதம் எடுத்துக் கொண்ட
நாளை வாழ்த்தினேன். சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும்,
நான் எடுத்துக் கொண்டிருந்த விரதத்திற்காகவுமே இதுவரை நான் புலால்
உண்ணாமல் இருந்து வந்தேன் ஆனால், அதே சமயத்தில் ஒவ்வோர் இந்தியரும்
மாமிசம் சாப்பிடுபவராக வேண்டும் என்ற விரும்பி வந்தேன். ஒரு
நாள் நானும் தாராளமாகவும், பகிரங்கமாகவும் அப்படிச் சாப்பிடுபவன்
ஆகவேண்டும் என்றும், மற்றவர்களையும் இதற்குத் திருப்ப வேண்டும்
என்றும் கருதி, அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஆனால், இப்பொழுது நான் சைவ உணவு விரதத்தை விரும்பி மேற்கொண்டுவிட்டதால்,
இதைப் பரப்புவதே என் வாழ்வின் லட்சியமாயிற்று.