பம்பாயில் குடியேறினேன்?
நான் பம்பாயில் குடியேறி, வக்கீல்
தொழிலை நடத்திக் கொண்டு பொதுவேலையில் தமக்கு உதவியாக இருகு;க
வேண்டும் என்று கோகலே அதிக ஆவலுடன் இருந்தார். அந்த நாளில் பொது
வேலை என்றால் காங்கிரஸ் வேலையே. கோகலேயின் உதவியினால் ஆரம்பமான
ஸ்தாபனத்தின் முக்கியமான வேலையும் காங்கிரஸின் நிர்வாகத்தை நடத்திக்
கொண்டு போவதுதான். கோகலேயின் யோசனை எனக்குப் பிடித்திருந்தது.
ஆனால் பாரிஸ்டராக இருந்து வெற்றி பெற முடியும் என்பதில் எனக்கு
அதிக நம்பிக்கை இல்லை. முன்னால் நான் இதில் கண்ட தோல்வியின்
வருத்தத்தக்க நினைவுகள் இன்னும் எனக்கு இருந்து வந்தன. கட்சிக்காரர்களைப்
பெறுவதற்காக முகஸ்துதி செய்வதை, விஷம்போல நான் இன்னும் வெறுத்துவந்தேன்.
ஆகையால் முதலில் ராஜ்கோட்டில் தொழிலை ஆரம்பிப்பது என்று முடிவு
செய்தேன். முன்னாலிருந்தே என் நலனை விரும்புகிறவரும், நான் இங்கிலாந்துக்குப்
போக வேண்டும் என்று தூண்டியவருமான கேவல்ராம் மாவிஜி தவே அங்கே
இருந்தார். அவர் உடனேயே ஆரம்பமாக மூன்று வக்காலத்துக்களைக் கொடுத்தார்.
அவைகளில் இரண்டு கத்தியவார் ராஜிய ஏஜெண்டின் நிதி உதவியாளர்
முன்பு செய்யப்பட்டிருந்த அப்பீல்கள். மற்றொன்று, ஜாம் நகரில்
அசல் வழக்கு. கடைசியாகச் சொன்ன இந்த வழக்கே மிகவும் முக்கியமானது.
இந்த வழக்கைத் திறம்பட நான் நடத்த முடியும் என்று எனக்கு நம்பிக்கை
ஏற்படவில்லை என்று சொன்னேன். உடனே கேவல்ராம் தவே, வெற்றி பெறுவது,
தோல்வியடைவது என்பதைப்பற்றி உமக்குக் கவலை வேண்டியதில்லை. உம்மால்
முடிந்த வரையில் முயன்று பாரும். உமக்கு உதவி செய்வதற்கு நான்
இருக்கவே இருக்கிறேன் என்றார்.
எதிர்த் தரப்பு வக்கீல் காலஞ்சென்ற ஸ்ரீ சமர்த்.
ஓரளவுக்கு நான் நன்றாகவே அவ்வழக்கு சம்பந்தமாகத் தயார் செய்து
வைத்திருந்தேன். இந்தியச் சட்டம் எனக்கு அதிகம் தெரியும் என்பதல்ல,
ஆனால் கேவல்ராம் தவே அவ்வழக்குச் சம்பந்தமாக எனக்கு முழுவதும்
சொல்லிக் கொடுத்திருந்தார். ஸர் பிரோஸ்ஷா மேத்தாவுக்குச் சாட்சியைப்பற்றிய
சட்டம் முழுவதும் தலைகீழ்ப் பாடமாகத் தெரியும், அவருடைய வெற்றியின்
ரகசியமே அதுதான் என்று நான் தென்னாப்பிரிக்காவுக்கு போவதற்கு
முன்னால் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதை மனத்திலேயே
வைத்தும் இருந்தேன். எனவே என் கப்பல் பிரயாணத்தின்போது இந்திய
சாட்சியச் சட்டத்தை, அதைப் பற்றிய விளக்கங்களுடன் சேர்த்துக்
கவனமாகப் படித்திருந்தேன். அதோடு, தென்னாப்பிரிக்காவில் வக்கீல்
தொழிலில் எனக்கு அனுபவமும் சாதகமாக இருந்தது.
இவ்வழக்கில் வெற்றி பெற்றேன். கொஞ்சம் நம்பிக்கையும்
உண்டாயிற்று. அப்பீல்களைக் குறித்து எனக்குப் பயமே இல்லை. அவற்றிலும்
வெற்றி பெற்றேன். பம்பாயில் தொழில் நடத்தினாலும் நான் தோல்வியடைய
மாட்டேன் என்ற ஒரு நம்பிக்கையை இவையெல்லாம் எனக்கு உண்டாக்கின.
பம்பாய்க்குப் போய்விடுவது என்று நான் தீர்மானித்ததைக் குறித்த
சந்தர்ப்பங்களைப் பற்றிச் சொல்லும் முன்பு, பிறர் கஷ்டத்தை உணராத
ஆங்கில அதிகாரிகளின் போக்கைக் குறித்தும், அவர்களுடைய அறியாமையைப்பற்றியும்
எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கூற விரும்புகிறேன். நீதி உதவியாளரின்
கோர்ட்டு ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் போய்க்கொண்டே
இருக்கும். அந்த நீதிபதி சதா சுற்றுப் பிரயாணம் செய்துகொண்டே
இருப்பார். வக்கீல்களும் கட்சிக்காரர்களும் அவர் முகாம் போடும்
இடத்திற்கெல்லாம் போய்க் கொண்டிருக்க வேண்டியிருக்கும். தலைமை
ஸ்தானத்தை விட்டு வெளியூர் போக வேண்டும் என்றால் வக்கீல்கள்
அதிகக் கட்டணம் கேட்பார்கள். இதனால், கட்சிக்காரர்களுக்குச்
சகஜமாகவே செலவு இரட்டிப்பு ஆகும். இவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைப்பற்றி
நீதிபதிக்குக் கவலையே இல்லை. நான் மேலே சொன்ன அப்பீல் விசாரணை
வேராவலில் போடப்பட்டிருந்தது. அவ்வூரிலோ பிளேக் நோய் கடுமையாகப்
பரவியிருந்தது. 5,500 பேரையே கொண்ட அவ்வூரில் தினமும் 50 பேருக்கு
அந்நோய் கண்டுகொண்டிருந்தது என்பதாக எனக்கு ஞாபகம். உண்மையில்
அந்த ஊரில் யாருமே இல்லை எனலாம். அவ்வூரிலிருந்து கொஞ்ச தூரத்திலிருந்த
ஆளில்லாத தரும சத்திரத்தில் நான் தங்கினேன். ஆனால் கட்சிக்;காரர்கள்
எங்கே தங்குவது ? அவர்கள் ஏழைகளாக இருந்துவிட்டால், கடவுளின்
கருணையில் நம்பிக்கை வைத்திருப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு
கதி இல்லை.
இதே கோர்ட்டில் என் நண்பர் ஒருவருக்கும் வழக்குகள்
இருந்தன. வேராவலில் பிளேக் நோய் பரவி இருப்பதால் கோர்ட்டை வேறு
இடத்திற்கு மாற்றுமாறு கோரி மனுச் செய்து கொள்ளும்படி அவர் எனக்குத்
தந்தி கொடுத்திருந்தார். இந்த மனுவை நான் கொடுத்ததன் பேரில்
துரை, உங்களுக்குப் பயமாக இருக்கிறதா ? என்று கேட்டார். எனக்குப்
பயமாயிருக்கிறதா, இல்லையா என்பது விஷயமல்ல. நான் எப்படியாவது
வெளியில் இருந்துவிட முடியும். ஆனால், கட்சிக்காரர்களின் நிலைமை
என்ன ? என்று பதில் சொன்னேன். இதற்குத் துரை கூறியதாவது, பிளேக்
இந்தியாவில் நிரந்தரமானதாகிவிட்டது. அப்படியிருக்கப் பயப்படுவானேன்
? வேராவலின் சீதோஷ்ண நிலை மிகவும் நன்றாக இருக்கிறது. (துரை
டவுனுக்கு வெகு தொலைவில் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த அரண்மனைபோன்ற
ஒரு கூடாரத்தில் தங்கியிருந்தார்.) இவ்வாறு திறந்த வெளியில்
வசிப்பதற்கு மக்கள் நிச்சயம் கற்றுக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட
வேதாந்தத்திற்கு எதிராக விவாதித்துப் பயனில்லை. கடைசியாக, துரை
தமது சிரஸ்தேதாரிடம், காந்தி கூறுவதைக் கவனித்துக் கொள்ளும்.
வக்கீல்களுக்கோ, கட்சிக் காரர்களுக்கோ அதிக அசௌகரியமாக இருக்கிறதென்றால்
எனக்கு அறிவியும் என்றார்.
சரியானது என்று தாம் நினைத்ததைத் துரை யோக்கியமாகச்
செய்தார். ஆனால் ஏழை இந்தியரின் கஷ்டங்களைக் குறித்து அவருக்கு
எப்படித் தெரியமுடியும் ? மக்களின் தேவைகள், குணாதிசயங்கள்,
பைத்தியக்காரத்தனங்கள், பழக்கங்கள் ஆகியவைகளை அவர் எப்படிப்
புரிந்துகொள்ள முடியும் ? தங்க நாணயங்களைக் கொண்டே பொருள்களை
மதிப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் திடீரென்று சின்னச் செப்புக்காசுகளைக்
கொண்டு எப்படிக் கணக்கிடுவார் ? யானைக்கு எறம்பினிடம் நல்லெண்ணமே
இருக்கலாம். ஆனால், எறம்பின் தேவையையும் சௌகரியத்தையும் கொண்டு
சிந்திக்கும் சக்தி எவ்வாறு யானைக்கு இல்லையோ அதேபோல இந்தியருக்குச்
சௌகரியமான வகையில் சிந்திக்கவோ, சட்டம் செய்யவோ ஆங்கிலேயருக்குச்
சக்தியில்லை. இனித் திரும்பவும் கதைக்கு வருவோம். வக்கீல் தொழிலில்
நான் வெற்றிபெற்ற போதிலும், இன்னும் கொஞ்ச காலம் ராஜ் கோட்டில்
இருப்பது என்றே எண்ணிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு நாள்
கேவல்ராம் தவே என்னிடம் வந்தார். காந்தி, நீங்கள் இங்கே அதிக
வேலையில்லாதிருப்பதை நாங்கள் சகித்துக் கொண்டிருக்க முடியாது.
நீங்கள் பம்பாயிக்கு குடிபோய்விட வேண்டும் என்றார். ஆனால் அங்கே
எனக்கு யார் வேலை தேடிக்கொடுப்பார்கள் ? என் செலவுக்கு வேண்டிய
ஏற்பாடுகளை நீங்கள் செய்வீர்களா ? என்று கேட்டேன்.
இதற்கு அவர் கூறியதாவது, சரி, நான் செய்கிறேன்.
பம்பாயிலிருந்து பெரிய பாரிஸ்டர் வருகிறார் என்று சில சமயங்களில்
உம்மை இங்கே கொண்டு வருவோம். மனுத் தயாரிப்பது போன்ற வேலையை
அங்கேயே அனுப்புகிறோம். ஒரு பாரிஸ்டரைப் பெரியவராக்குவதோ, ஒன்றுமில்லாதபடி
செய்து விடுவதோ வக்கீல்களாகிய எங்கள் கையில் இருக்கிறது. உமது
திறமையை ஜாம்நகரிலும் வேராவரிலும் நிரூபித்துக் காட்டிவிட்டீர்.
ஆகையால், உம்மைப்பற்றி எனக்குக் கொஞ்சமும் கவலையே இல்லை. நீர்
பொதுஜன சேவைக்கென்றே பிறந்திருப்பவர். நீர் கத்தியவாரில் புதைந்துகிடந்துவிட
நாங்கள் அனுமதிக்கமாட்டோம். எனவே, எப்பொழுது பம்பாய் போகிறீர்
சொல்லும். நேட்டாலிலிருந்து பணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
அது வந்ததும் நான் போகிறேன் என்றேன். இரண்டு வாரங்களில் பணம்
வந்துவிட்டது. நானும் பம்பாய் சென்றேன். பேய்னே, கில்பர்ட்,
சயானி ஆபீஸ் கட்டடத்தில் என் அலுவலகத்தை அமைத்துக்கொண்டேன்.
அங்கேயே நான் ஸ்திரமாகக் குடியேறிவிட்டதாகவே தோன்றியது.